Monday, February 21, 2011

"பொறுப்பை சரியாக செய்கிறேன்!'



தன் கிராம வளர்ச்சிக்காக பொறுப்பாக உழைக்கும் ஊராட்சித் தலைவர் ராஜு: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியத்தைச் சேர்ந்த களிமண்குண்டு கிராமத்தின் ஊராட்சித் தலைவராக உள்ளேன். இது, மீனவக் கிராமம், அனைவரும் மீன் பிடிக்க சென்று விடுவர். குடிநீர் குழாய் உடைப்பு, சாலை சீரமைத்தல் போன்ற பணிகளுக்கு ஆள் கிடைக்காது.பக்கத்து ஊரில் இருந்து ஆட்களை கூட்டி வந்தாலும், "யார் குறைந்த கூலிக்கு வரத் தயாரா உள்ளனரோ, அவர்களை வைத்து தான், முடிக்கணும்'னு அலுவலக விதி உள்ளது. "வேலை முடிஞ்சதும், காசோலையாகத் தான் கூலியைத் தரணும்'ன்னும் விதி உள்ளது. அந்தக் காசு அவர்களுக்கு கிடைக்க 20 நாட்களாகிவிடும், அதனால், யாரும் வருவதில்லை.அதனால், ஊர் வேலைகள் சிலவற்றை நானே செய்து விடுவேன்.நான் படித்தது ஆறாம் வகுப்பு என்றாலும், ஊராட்சி வேலைகள் அனைத்தும் மனப்பாடமாக தெரியும். ஆரம்பப் பள்ளி, மைதானம், குடிநீர்த் தொட்டிகள், தெருக்குழாய்கள், நூலகம் என, அனைத்தையும் புள்ளி விவரங்களுடன் என்னால் கூற முடியும்.ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், என் தந்தை இறந்தபோது மட்டும் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்திருக்கிறேன்.என் கிராமத்தின் வேலைகளை பிரதமரோ, முதல்வரோ, மந்திரியோ நேரில் வந்து செய்ய முடியாது; அதனால்தான் என்னை தலைவரா தேர்ந்தெடுத்து, பொறுப்பைக் கொடுத்துள்ளனர். அதைக் கடைசி வரைக்கும் சரியா செய்ய வேண்டும் என்பது என் ஆசை. வெள்ளை வேட்டி, சட்டை போட்டு, காரில் பந்தாவா போனா மக்கள் தேவை பூர்த்தி அடையாது.

Saturday, February 12, 2011

பெரும் உயிர் அழிவிற்குப்பின் வாழப்போகும் கரப்பான் பூச்சி

அணுகுண்டு ஒன்று வெடித்து பெரும் உயிர் அழிவு ஏற்பட்ட பின் சுடுகாடாக மாறியிருக்கும் பிராந்தியத்தை பார்க்க கூடிய ஒரு உயிரினம் ஒன்று உள்ளது என்றால் அது வீட்டில் வாழும் கரப்பான் பூச்சிதான்.
கரப்பான் பூச்சி மனிதனை விட பல ஆயிரம் மடங்கு கதிர் வீச்சை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் இவை தோன்றியது மனித இனம் தோன்றுவதற்கு முன். அதாவது 350 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியவை.

உலகின் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வாழும் கரப்பான் பூச்சியின் தாயகம் ஜெர்மனி நாடாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாகும்.
 தற்போது உலகில் சுமார் 3490 கரப்பான் இனங்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை ஆறு குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி தலை நெஞ்சு வயிறு எனும் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றிற்கு மூன்று ஜோடி கால்களும் ஒரு ஜோடி உணர்கொம்பும்
உண்டு.கரப்பான் பூச்சிக்கு முதுகெலும்பு கிடையாது. இரண்டு  ஜோடி அல்லது ஒரு ஜோடி சிறகுகள் கணப்பட்டாலும் சில கரப்பான் பூச்சிக்கு சிறகுகள் கிடையாது.கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளை நிறமுடையது! இவற்றால் தலை துண்டிக்கப்பட்டாலும் சுவாசிக்க முடியும்!!(சில கரப்பான் பூச்சிகளால் வளி இல்லாமல் 45 நிமிடங்கள் வாழமுடியும்.)

உலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி இனம் Giant burrowing cockroach ஆகும். இது ஆஸ்திரேலியாவில்காணப்படுகின்றது.இது 9 சென்ரிமீட்டர் வரை வளரக்கூடியது. இதன் எடை 30 கிராமை விட அதிகமாக இருக்கும்.

இந்த கரப்பான் நிலத்தை 3 அடி(1 மீட்டர்) அழத்திற்கு தோண்டி வசிக்கின்றது.இதன் காரணமாகவே இதற்கு Giant burrowing cockroach என பெயர் வந்தது. (burrow-பூமியில் வளை தோண்டும்). இதற்கு சிறகுகள் கிடையாது.

கரப்பான் பூச்சியின் உணர்கொம்புகள் சூழலை அறிய உதவுகின்றது. இரவில்(இருட்டில்) உணவு வேட்டையை செய்யும். இவை எந்த பாகுபாடுமில்லாமல் எல்லாவிதமான உணவையும் வெட்டியும் அரைத்தும் உண்கின்றன. அப்படி உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் காகிதம் சோப்பு போன்றவை கூட உணவாகும். இதற்கு இதன் வலிமை வாய்ந்த தாடைகள் உதவி செய்கின்றன. சில சமயம் உணவே கிடைக்காமல் கரப்பான் பூச்சியினால் மூன்று மாதங்கள் வரை உயிர் வாழ முடியும்!
ஆஸ்துமா ஆபத்து கரப்பான் பூச்சிகளால் ?
உங்கள் வீடுகளில் அதிக அளவில் கரப்பான் பூச்சிகள், எலிகள் உள்ளதா? உடனடியாக அவற்றை ஒழிக்க முயற்சி எடுங்கள். இல்லாவிட்டால், அவற்றின் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
வீசிங் எனப்படும் மூச்சுத்திணறல், கடுமையான காய்ச்சல், எக்ஸிமா எனப்படும் ஒவ்வாமை நோய் போன்றவை 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பரவுவதற்கு கரப்பான் பூச்சிகளும், எலிகள் மூலம் வெளிப்படும் ஒருவகை புரோட்டீனும் காரணமாக அமைவதாக கொலம்பியா குழந்தைகள் சுற்றுப்புற சூழல் சுகாதார மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கரப்பான் பூச்சிகள், எலிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், உடல்நிலையில் ஏற்படும் அறிகுறிகள் பற்றியும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டனர்.

வீட்டிற்குள் உருவாகும் ஒவ்வாமையில் கரப்பான் பூச்சிகளும், எலிகளும் முக்கியப் பங்கு வகிப்பது கண்டறியப்பட்டது. அதிலும் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கு அவை காரணமாக இருப்பது தெரிய வந்தது.

கரப்பான் பூச்சியின் மூளையில் நுண்ணுயிர் எதிர்ப்பு ஆற்றல்
கரப்பான் பூச்சியும் வெட்டுக்கிளியும் மனிதரின் உயிர் காக்கும் மருத்துவர்களாக மாறும் நாள் வெகுதொலையில் இல்லை என இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சைமன் லீ என்பவரின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பூச்சிகளின் மூளையில் காணப்படுகின்ற வேதிக் கூறுகள் பல தீங்குதரும் நுண்ணுயிரிகளைக் கொல்லும் தன்மை கொண்டுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சி (வட்டார வழக்கில் பாச்சான்,பாச்சா, பாச்சை) அழுக்கு நிறைந்த சூழலிலும் உயிர் வாழும் தன்மையது. அங்கே தொற்றுநோய்களைப் பரப்பும் நுண்ணுயிரிகள் நிறைந்திருக்கும். இருப்பினும் அந்நுண்ணுயிரிகளை எதிர்க்கும் சக்தி கரப்பான் பூச்சியின் மூளைப்பகுதியில் காணப்படும் வேதிக் கூறுகளுக்கு உள்ளது. கரப்பான் பூச்சியின் நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளின் தாக்குதலிலிருந்து காக்கப்படுவது வியப்பைத் தருகிறது என்று அறிவியலார் கருதுகின்றனர். நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளால் தாக்கப்பட்டால் சாவு உறுதி. ஆனால் கரப்பான் பூச்சியிடம் நுண்ணுயிரி எதிர்ப்புத்திறன் மிகுதியாகவே உள்ளது.
கரப்பான் பூச்சியின் மூளைப் பகுதியிலிருந்து பெறப்படும் சிற்றளவிலான வேதிக் கூறுகள் நுண்ணுயிரிகளைக் கொல்வதில் 90% திறம் கொண்டவையாக உள்ளனவாம்.
இக்கண்டுபிடிப்பின் விளைவாக மருத்துவத் துறை பயன்பெறும் என்றாலும் அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.

வருகிறது, அனைத்து வகை செல் போனுக்கும் ஒரே சார்ஜர்

அனைத்து வகையான செல் போனுக்கும் ஒரே சார்ஜர் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தபடுகிறது. உலகின் புகழ்பெற்ற செல் நிறுவனங்களான நோகியா, ஆப்பிள், மோட்டோரோலா, எல்ஜி, சாம்சங் உட்பட சுமார் 19 நிறுவனங்கள் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதன்படி, இந்த வருட இறுதிக்குள் அனைத்து நிறுவனங்களும் ஒரே வகையான சார்ஜர்களை தான் தயாரித்து விற்பனை செய்யும். இது குறித்த தேவையான நடவடிக்கையை ஐரோப்பிய ஆணையம் முன்னின்று செய்து வருகிறது. இந்த ஒரே சார்ஜர் மூலம், மின் கழிவைக் குறைக்க முடியும் என்றும், செல் போன் உபயோகிப்பாளர்களுக்கும் வசதியாக இருக்கும் என கூறியுள்ளது.

21ஆம் நூற்றாண்டில் மக்கள் புரட்சியால் ஆட்சியை இழந்த தலைவர்கள்!

வேலையில்லாத் திண்டாட்டம், ஆட்சியாளர்களின் ஊழல், மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக ஆட்சியாளர்கள் செயல்படுதல் போன்றவற்றின் காரணமாக ஆட்சியாளர்கள் மீது வெறுப்புரும் மக்கள் வீதிக்கு வந்து போராடுவதன் மூலம் சர்வாதிகாரிகள் பலரை ஆட்சியைவிட்டு மட்டுமல்ல நாட்டை விட்டே துரத்தி அடித்துள்ளனர். சர்வாதிகாரம், மன்னாராட்சிகள் போன்றவை பெரும்பாலான நாடுகளில் 20ஆம் நூற்றாண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது. என்றாலும் சில நாடுகளில் அவை தொடரத்தான் செய்கின்றன.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, ஆட்சியாளர்களை விரட்டி வரலாற்று நிகழ்வுகளாகப் பதிவு செய்யப்பட்டுவிட்ட 21ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர்கள் சிலரைப் பற்றிய குறிப்புகள் இந்நேரம் வாசகர்களுக்காகத் தருகிறோம்.

2000  ஜனவரி - ஈக்குவடார்: அதிபர் ஜமில் மஹோத், தனது பொருளாதார கொள்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தால் பதவியிழந்தார்


2000 அக்டோபர் - முன்னாள் யுகோஸ்லாவியா: செர்பிய இரும்பு மனிதர் ஸ்லோபோடன் மிலோசெவிக், தேர்தல் முறைகேடுகளுக் கெதிராக பெக்ராடில் நடந்த மாபெரும் மக்கள் போராட்டத்தால்  தனது பதவியிலிருந்து விலகினார், பின்னர் ஹாகுவிலுள்ள  ஐ.நா வின் போர் குற்றங்களுக்கான நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்டார், அங்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே அவர் மரணமடைந்தார்.


2001 ஜனவரி - பிலிப்பைன்ஸ்: அதிபர் ஜோசப் எஸ்ட்ராடா, 6 ஆண்டுகள் நடந்த இவரது ஆட்சியில் நாடுமுழுவதும் பரவிய லஞ்ச லாவன்யத்தால், ராணுவ உதவியோடு 30 மாதங்கள்  நடந்த மக்கள் புரட்சியால் தனது பதவியை இழந்தார்

2001 டிசம்பர் - அர்ஜென்டினா :அதிபர் பெர்னாண்டோ  டி  லரா , மக்கள் புரட்சிக்கெதிரான காவல்துறையின் கடும் அடக்குமுறை நடந்து ஒரே வாரத்தில்   பதவி விலகி ஹெலிகாப்டரில் தப்பிச்சென்றார், காவல்துறையின் கடும் அடக்குமுறையால் மக்கள் 27  பேர் உயிரிழந்தனர்.


2003 அக்டோபர் - பொலிவியா: அதிபர் கோன்சலோ சன்செஸ் டி லோசட சர்வதேச எண்ணெய் கம்பெனிகளிடம் நடத்திய பேரத்தின் விளைவாக ஏற்ப்பட்ட மக்கள் புரட்சியால் பதவிலிருந்து விலகி அமெரிக்க ஹெலிகாப்டரில் தப்பிச்சென்றார், இந்த போராட்டத்தில் மக்கள் 65 பேர் உயிரிழந்தனர் ,

2003 நவம்பர் - ஜார்ஜியா : அதிபர் எடோர்ட் ஷேவர்ட்னட்சே, 30  ஆண்டுகளாக ஜார்ஜியா அரசியலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இவர், மைகேல் சாகஷ்விலி என்பவரது தலைமையில் நடந்த ரோஸ் புரட்சி என்றழைக்கப்பட்ட புரட்சியால் ஆட்சியை இழந்தார், தேர்தலில் அதிபர் எடோர்ட் ஷேவர்ட்னட்சே யின் கூட்டணி வெற்றி பெற்றது செல்லாது என்று எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மைகேல் சாகஷ்விலி தலைமையில் நாடாளுமன்றத்தில் நுழைந்தனர்.


2004  பெப்ரவரி  - ஹைதி : அதிபர் ஜீன் பெர்ட்ராந்து அரிஸ்டைடு  மக்கள் போராட்டத்தாலும் சர்வதேச நாடுகளின் நிர்பந்தத்தாலும் தனது ஆட்சியை இழந்து தென்ஆப்பிரிக்காவில் தஞ்சமடைந்தார், நான்கு வாரங்கள் நடந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட  100 பேர் உயிரிழந்தனர்.

2004 நவம்பர் - டிசம்பர் - உக்ரைன் : அதிபர் விக்டர்  யானுகோவிச் முறைகேடாக நடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்த ரஷிய ஆதரவாளர்  விக்டர்  யானுகோவிச்சுக்கு எதிராக ஆரஞ்சு புரட்சி என்றழைக்கப்பட்ட மக்கள் புரட்சியால் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் மேற்க்கத்திய ஆதரவாளர் விக்டர் யுஸ்செங்கோ அதிபரானார்.

2005 மார்ச் - கிர்கிஸ்தான்:  அதிபர் அஸ்கர் அகயேவ் - அதிகரித்த லஞ்ச லாவண்யம் மற்றும் தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக பலமணிநேரம் நடந்த மக்களின் போராட்டத்தால் ஆட்சியை இழந்து ரஷ்யாவிற்கு நாடுகடத்தப்பட்டார்


2005 ஜூன் - பொலிவியா: அதிபர் கார்லோஸ்  மேசா, தனக்கு முன் பதவியிழந்த  முன்னாள்  அதிபர் கோன்சலோ சன்செஸ் டி லோசடசாவை தொடர்ந்து அதிபர் பதவியேற்ற துணை அதிபர் கார்லோஸ்  மேசாவும் மக்கள் எதிர்ப்பால்  தனது பதவியை ராஜினாமா செய்தார்


2010  ஏப்ரல் கிர்கிஸ்தான் : அதிபர் குர்மன்பேக் பகியேவ், தனக்கு முன் பதவியிழந்த  முன்னாள்  அதிபர்  அகயேவை தொடர்ந்து பதவியேற்ற, குர்மன்பேக் பகியேவ்,  மக்கள் புரட்சியால் தனது ஆட்சியை துறந்து பெலாரசில் தஞ்சமடைந்தார், இந்த புரட்சியில்  மக்கள்  87   பேர் உயிரிழந்தனர்

2011 ஜனவரி - துனீசியா அதிபர் ஜைனுலாபீதீன் பென் அலி, 1987  முதல் ஆட்சியில் இருந்த அதிபர்,  மல்லிகை புரட்சி என்று அழைக்க்கப்பட்ட மக்கள் புரட்சியால் தனது ஆட்சியை துறந்து சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்தார், இந்த புரட்சியில் 200 க்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிரிழந்தனர்


2011 பிப்ரவரி - அரபு நாடான துனீசியாவில் நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து 2011 ஜனவரி 25ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை 18 நாள்கள் தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் மக்கள் புரட்சியைத் தொடர்ந்து எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார்.

Friday, February 11, 2011

மொபைல் நம்பரை வேறு நெட்வொர்க் மாற்றும் புதிய வசதி.

மொபைல் போன் வாடிக்கையாளர்கள் நம்பரை மாற்றாமல், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. மொபைல் போன் வாடிக்கையாளர் எண்ணிக்கைக்கு தக்க வகையில், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களின் வருகையும் கணிசமாக உயர்ந்து விட்டது. இதனால், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை கவரும் விதத்திலும்  புதுப்புது சேவைகளை, சலுகைகளை அறிவித்து வருகின்றது  வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அதிக சேவை மற்றும் சலுகை வழங்கும் நிறுவனத்திற்கு தாவி விடுகின்றனர். அப்படி தாவும் போது, மொபைல் போன் நம்பரை அடிக்கடி மாற்றும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகின்றனர். இதைமொபைல் போன் வாடிக்கையாளர்கள் நம்பரை மாற்றாமல், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதி அறிமுகம்.
அது Mobile Number Portability எனும் வசதி TROI கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.
முதலில் நீங்கள் UPC(Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல்(SMS) அனுப்ப வேண்டும்.
இப்போது உங்களுக்கு 1901 எனும் எண்ணில் இருந்து எட்டு இலக்க எண் மற்றும் அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.
தங்கள் அருகாமையில் இருக்கும் எந்த ஒரு புதிய மொபைல் சேவை நிறுவன மையம் உள்ளதோ(நீங்கள் விரும்பும் ஏதேனும் Ex: Airtel, Vodafone, Docomo, Reliance) அங்கு செல்லவும்.
அவர்கள் தரும் சேவை மாற்று படிவத்தில் பின் வரும் தகவல்களைக் கொடுக்கவும்.
தற்போதைய மொபைல் எண்.
தற்போதைய மொபைல் சேவை நிறுவனம்.
UPC code
தங்களின் முகவரி சான்று, அடையாளச் சான்று, சுய கையோப்பமிட்ட புகைப்படம் மற்றும் கடந்த மாதத்தின் பில்(If it is postpaid). போன்றவற்றையும் கொடுக்கவும்.

அவர்கள் உங்களுக்கு புதிய SIM அட்டை கொடுப்பார்கள். சில நிறுவனம் இந்த புதிய SIM cardக் கென கட்டணம் கேட்டாலும் கேட்பார்கள். (Rs. 50 to Rs. 100)
உங்களின் புதிய நிறுவனம் பழைய நிறுவனத்திற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி நீங்கள் கட்சி மாறி விட்டதாக தகவல் கொடுப்பார்கள். நீங்கள் அந்த பழைய SIM கார்டை எந்தத் தேதி வரை பயன்படுத்தலாம் எனும் தகவலும் உங்களுக்கு கொடுக்கப்படும்.
அதே நாள் அல்லது அடுத்த நாள் இரவு 12 மணி முதல் 5 மணிக்குள் உங்களின் மொபைல் சேவை 2 மணி நேரம் தூண்டிக்கப்படும்.
இப்போது நீங்கள் உங்களின் புதிய மொபைல் நிறுவன வாடிக்கையாளராக மாறிவிட்டீர்கள்.

இந்த சேவை மூலமாக மொபைல் நம்பரை மாற்ற தேவையில்லை.

Monday, February 7, 2011

வேலைதேடும் பட்டதாரிகளிடம் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது என்ன? - சவாலே சமாளி!

வேலைதேடும் புதிய பட்டதாரிகளிடம் தொழில் நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன? எத்தகைய தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்?...என்பது குறித்து வேலைதேடும் இளைஞர்களுக்கு சுரேகா கோத்தாரி கூறும் யோசனைகள் :
மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில் எத்தகைய பணியில் சேருவது என்பது குறித்து இளைஞர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும். பல சமயங்களில் ஒரு பணியில் சேர்ந்த பிறகு அதுகுறித்து மறுபரிசீலனை செய்யும் நிலைக்குப் பல இளைஞர்கள் ஆளாகிறார்கள். திறனறிவு (APTITUDE), விருப்பம், அர்ப்பணிப்பு உணர்வு போன்றவற்றின் அடிப்படையில் எத்தகைய பணியில் சேருவது என்று தொடக்கத்திலேயே முடிவு செய்வதில்லை. பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப, கவர்ச்சிகரமானது என்று அவர்களால் கருதப்படும் பணிகளில் சேரும்போது இதுபோன்ற நிலை ஏற்படுகிறது.
ஒவ்வொரு துறையும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக மாறி வருகிறது. இன்றைக்கு உள்ள நோக்கும் தொழில்நுட்பமும் சில ஆண்டுகளிலேயே காலாவதியாகிவிடும். அதனால் காலத்தின் தேவைக்கேற்ப தங்களைத் தொடர்ந்து தரம் உயர்த்திக் கொள்ளாதவர்கள், நடு வாழ்க்கையில் பணிகளில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இல்லாவிட்டால் ஸ்தம்பித்துப் போய்விட நேரிடும். இன்றைய உலகில் பொருட்கள் சர்வதேசத் தரத்தில் இருக்க வேண்டும். எனவே, தனிப்பட்ட பணியும் ஒரு பொருளைப் போல சர்வதேசத் தரத்தில் இருக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் எத்தகைய தரத்தில் கல்வி பெறுகிறோம் என்பதுடன் தலைமைப் பண்பு, குழுவுடன் இணைந்து செயல்படுதல் போன்ற ஆளுமைப் பண்புகளையும் பெற்றிருக்க வேண்டும். திறமையான செயல்பாடு முக்கியம். வெற்றிக்கு குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது. பணியில் அர்ப்பணிப்பு உணர்வு, கடுமையாக உழைக்கும் திறன், நம்பகத்தன்மை ஆகியவற்றின் மூலம்தான் வெற்றியை ஈட்ட முடியும்.
ஊழியர்கள் சிறப்பாக உழைப்பதையே வேலை வழங்குபவர்கள் விரும்புகிறார்கள். விருப்பப் பணி ஓய்வோ அல்லது கட்டாயப் பணி ஓய்வோ இன்றைய நடப்புகளாகிவிட்டன. எனவே, இளம் பருவப் பணிக்காலத்திலேயே அதிக அளவில் சேமிக்க வேண்டியது குறித்து இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும். வயது வளர வளர, செயல்பாட்டையும் திறமையையும் தொடர்ந்து உயர்நிலையில் தக்க வைத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைக் காண வேண்டும். இந்தியாவில், சமூகத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். புதிய பொருளாதாரக் கொள்கை குறித்துக் கூக்குரல் எழுப்பப்படுகிறது. அதைவிட, பழைய பொருளாதார முறையில் இன்றைக்கும் நிறையப் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். உலகளாவிய அளவில் போட்டி போட வேண்டிய சூழ்நிலையில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.
பெருமளவு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு இடம் அளிக்கும் வகையில் பழைய பொருளாதாரத்தை அரசு தாராளமயமாக்க வேண்டியுள்ளது. வீட்டுக் கடன்களுக்கு வரிச் சலுகை அளித்ததன் மூலம் கட்டடத் தொழிலுக்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளது. திறமை, திறனறிவு, சிறப்புச்சாதனைக்கான ஊக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இன்றையப் பணி அமைகிறது. தொழிலுக்குத் தேவையான படிப்பைப் பெறுவதன் மூலம் மட்டுமே வெற்றிகரமான பணிக்கு உத்தரவாதமாக இருக்காது. உலகளாவிய அரசியல் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக, குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் பணிக்குச் செல்வதற்குச் சாதகமான சூழ்நிலை இருக்காது.
சேவைத்துறைகள் நிறுவனமயமாக்கப்பட்டு, பல்வேறு நிலைகளில் தொழில்திறன்மயமாக்கப்படும் சூழ்நிலையில், நாட்டில் சிறு தொழில்முனைவோர் என்பது கெட்டகனவாகி வருகிறது. எனவே, பெரிய நிறுவனங்களில் அனுபவம் பெற்ற பின்னர் தொழில் முனைவோராவது நல்லது. வெற்றி என்பது ஒரு நாள் கனவு நிறைவேறுவதுடன் முடிந்து விடுவதல்ல. வாழ்க்கை என்பது சவால். துணிச்சலாகச் சிந்திக்க வேண்டும். "க்ரியேட்டிவ்வாக' இருக்க வேண்டும். இப்போதையச் செயல்பாடுகள் முந்தையச் செயல்பாடுகளைவிட மேம்பட்டு இருக்க வேண்டும். கற்பது என்பது முடிவற்றதாக இருக்க வேண்டும். இப்படி இருந்தால் தான் வெற்றியாளராக இருக்க முடியும். சரியான அணுகுமுறையும் விடாப்பிடியான உணர்வும் இதற்குத் தேவை.

கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பது எப்படி?

உடற்பயிற்சி செய்துவந்தால், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பலநோய்கள் அண்டாது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.  அமெரிக்காவிலுள்ள  யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வறிஞர் ஹன்னா ஆரெம் என்பவர் தன் ஆய்வுகளின் படி, வாரத்துக்கு சுமார் இரண்டரை மணி நேரமாவது உடல் பயிற்சி செய்யும் பெண்களை கர்ப்பப் பை புற்றுநோய் தாக்குவதில்லை என்று கூறியுள்ளார்.
பொதுவாக,  நாற்பது வயதுக்கு மேல் பெண்களை மிரட்டும் நோய்களில் தலையாய இடம் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு உரியது. இந்த நோயைத் தடுக்க வாரத்துக்கு சுமார் இரண்டரை மணி நேரமாவது உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்று ஹன்னா ஆரெம் கூறுகிறார்.

மேலும் குண்டான பெண்கள் கூட உடல் பயிற்சி செய்தால் கர்ப்பப்பை புற்றுநோயைத் தவிர்க்க முடியும் என்று சுமார் 6,000 பெண்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் அறிய முடிந்திருக்கிறது.

உடற் பயிற்சி என்று தனியாக நேரம் ஒதுக்கி செய்ய முடியாவிட்டாலும் கடுமையாக உடல் உழைப்பு செய்கிறவர்களுக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் வராது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அத்துடன் புற்றுநோய் மட்டும் அல்லாமல் வேறு சில நோய்களையும் உடற் பயிற்சி தடுக்கிறது என்கிறார் ஹன்னா.

புற்றுநோய் மருத்துவத்தில் புதிய முன்னேற்றம்

புற்றுநோய் பெரும்பாலும் குணப்படுத்த இயலாத நோயாகவே உலகம் முழுதும் கருதப்படுகிறது.  புற்றுநோய்க்கிருமிகள் அதற்கான அழிப்புமருந்துகளினும் அதிக வீரியம் பெறுவது எப்படி என்பது ஆய்வாளர்களுக்கு புதிராக இருந்துவந்தது. இந்நிலையில் புற்றுநோயாளிகளைக் குணப்படுத்த புதிய வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டக்ளஸ் பியர்சன், ஷீலா ஜோன் ஸ்மித் ஆகியோர் புற்றுநோய்க் கட்டிகளில் உள்ள புற்று வைத்த திசுக்களை அழிக்க, பரவாமல் தடுக்க, நோயாளிகளைக் குணப்படுத்த செலுத்தப்படும் ஊசி மருந்தும் இதர சிகிச்சை முறைகளும் தோல்வி அடைவது ஏன் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
புற்றுநோய் பாதித்த திசுக்களுக்குச் செல்லும் மருந்தின் வீரியத்தைக் குலைத்து அதை வேலை செய்ய விடாமல் தடுக்கும் கூட்டுத் திசுக்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுவிட்டனர்.
இது குறித்த ஆய்வொன்றில் சோதனைச் சாலையில் எலிகளுக்கு புற்றுநோயை உண்டாக்கி அதன் பாதிக்கப்பட்ட திசுக்களுக்குச் செல்லும் மருந்து வேலை செய்யாமல் தடுக்கும் செல்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி அவற்றைக் கொன்றனர். அதன் பிறகு மருந்து வேகமாக வேலை செய்து புற்றுநோய் செல்கள் அழிக்கப்பட்டு நோய் குணமானது. இதை மனிதர்களுக்கும் விரிவுபடுத்துவதற்கு முன்னர் மேலும் சிலமுறை சோதனைகளை நடத்தி உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.
புற்றுநோய் பாதித்த நோயாளிகளின் புற்றுக் கட்டிகளில் எப்.ஏ.பி. என்கிற அந்த ஸ்ட்ரோமல் செல்கள் இருப்பதை லாயிட் ஓல்ட் என்ற விஞ்ஞானியும் அவருடைய சகாக்களும் 20 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தனர். ஆனால் அதுதான் மருந்தை வேலை செய்யவிடாமல் தடுக்கிறது என்பதை லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டக்ளஸ் பியர்சன், ஷீலா ஜோன் ஸ்மித் ஆகியோர் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு புற்றுநோய் ஆய்விலும் மருத்துவத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது

கர்ப்ப காலத்தில் 'செல் பேசி'னால் குழந்தையைப் பாதிக்கும்

கர்ப்ப காலத்தில் செல் பேசி உபாயோகிப்பதால் கருவிலிருக்கும் சிசுவுக்குப் பெருத்த பாதிப்புகள் ஏற்படுவதாக கலிஃபோர்னியா பல்கலை கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
செல்(லிடப்)  பேசிக்கும், குழந்தைகள் நலனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழக  பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குழுத் தலைவர் பேரா. லீகா கெய்பட்ஸ் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:
"செல் பேசி  மற்றும் குழந்தைகள் நலன் பற்றிய இந்த ஆய்வில், 7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அதேபோல், 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக செல் பேசி பயன்படுத்தினால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பாதிப்படைகின்றனர்  என தெரிய வந்துள்ளது.
ஆய்வில் பங்குபெற்ற 3 சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்; சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர்; உடல் பருமன், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர். இதற்கு அவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில், தொடர்ச்சியாக செல் பேசி பயன்படுத்தியது தான் காரணம் என தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெற்றோரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் மார்பகப் புற்று நோய்

இங்கிலாந்தில் மார்பகப் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகப் புற்று நோய் தினமான இன்று இங்கிலாந்திலுள்ள புற்று நோய் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்நாட்டில் மார்பக புற்று நோய்க்கு இலக்காகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து பெண்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களே இதற்கு காரணமென்று அந்த ஆய்வு கூறுகிறது. அளவுக்கதிகமான மது மற்றும் உணவு அருந்துதல், சரியான உடற்பயிற்சியின்மை, காலம் கடந்து கர்ப்பம் தரித்தல் போன்றவை காரணங்களாக தெரிய வந்துள்ளன.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 1999ஆம் ஆண்டில் 42,400 ஆக இருந்த நிலை 2008 ஆம் ஆண்டில் 3.5 % அதிகரித்து 44,700 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. "50 லிருந்து 69 வயதுடைய பெண்களே இந்த நோய்க்கு அதிகம் இலக்காகிறார்கள்.  இருப்பினும், வளர்ந்து வரும் மருத்துவ வசதியினால் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் இந்த நோயை பெரும்பாலும் கட்டுப்படுத்த இயலும்" என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தற்போது இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு பெண்களின் எண்ணிக்கை 5,50,000 என்று அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.

Tuesday, February 1, 2011

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவை இல்லை

மகிழ்ச்சியுடன் மனிதன் வாழ வேண்டும் என்பதற்காகவே, மறதியை நமக்கு வரமாக அளித்திருக்கிறான்.
  நமது மகிழ்ச்சிக்கு மாபெரும் தடையாக இருப்பது நமது கடந்த காலம் பற்றிய சிந்தனைகளே!
அவற்றை மூட்டையாகக் கட்டி நம் மேல் ஏற்றிக் கொண்டு, இறக்கி வைக்கமுடியாமல் இம்சைக்கு உள்ளாகிறோம்.
நண்பர் ஒருவர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும்போதுகூட, நேற்று இவர் நம்மிடம் எரிச்சலுடன் நடந்துகொண்டாரே? என்ற கடந்த கால நினைவு, கதவைத் திறந்துகொண்டு உள்ளே வருகிறது. அவரோடு நம்மால் சகஜமாகப் பழகமுடிவதில்லை. செயற்கையான பிளாஸ்டிக் புன்னகையுடன் மனிதர்கள் வாழ ஆரம்பித்தால், வாழ்க்கை வறண்டு விடும்.
மகிழ்ச்சியுடன் மனிதன் வாழ வேண்டும் என்பதற்காகவே, மறதியை நமக்கு வரமாக அளித்திருக்கிறான். ஆனால், அந்த வரத்தைத் தொலைத்துவிட்டு, தேவையானவற்றை வழியவிட்டு, தகுதியற்றவற்றைத் தக்கவைத்துக் கொள்கிறோம்.விலங்குகள் எப்போதும் மகிழ்ச்சியுடன் விளையாட காரணம், அவை நிகழ்காலத்தில் மட்டுமே நீடித்திருக்கின்றன.
நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் ஏற்படுத்திக்கொள்கிற இணக்கமே, நமது மகிழ்ச்சியை மெருகேற்றுகிறது. வன்மம் நிறைந்த மனத்துடன் இருப்பவர்கள், மாநகராட்சி குப்பைகளைக் கொட்டும் இடத்தில் இருப்பதைப் போன்ற மனநிலையுடன் இருப்பார்கள். சூழலைச் சுகந்தமாக்குபவர்களால் மட்டுமே வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொள்ளமுடியும்.
நேற்று நம்மிடம் கோபப்பட்ட மனிதன் வேறு; அவனிடம் வருத்தத்தை வரவு வைத்த மனிதன் வேறு என்கிற புரிதல் வந்தால், மகிழ்ச்சி மட்டுப்படுவ தில்லை. வருத்தம் வரும்போதெல்லாம், உடனே அதை வடிகாலாக்குகிற வாழ்க்கை முறை முன்பு இருந்தது. குடும்பம் அதற்கு வழிவகுத்தது. யாரிடமாவது பகிர்ந்துகொண்டால், நமது சோகங்கள் பஸ்பமாகிவிடும் அனுசரணை இருந்தது.
ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்வில் பகிர்தல் குறைவு. உனது சோகம் உன்னுடன்! என்னுடையதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதே இன்றைக்கு உறவுகளுக்குள் இருக்கும் மேம்போக்கான, மிக மெல்லிய உறவு இழைகள்.எப்போது வேண்டுமானாலும் இற்றுப் போகிற நிலையில் ஊசலாடும் உறவுகளில், உண்மை ஊஞ்சலாட மறுக்கிறது.இன்றைக்கு எல்லாக் கதவுகளும் சாத்தப்பட்டே இருக்கின்றன. நமது உலகே சுருங்கிப்போன சூழலில், கடந்த காலத்தை ஊதி ஊதிப் பெரிதாக்கி, இறக்கி வைக்க முடியாமல் தவிக்கின்ற மனநிலையில், ஆனந்தக் குழந்தைகள் ஓடிவரும்போது, அவற்றை அள்ளி எடுத்து அரவணைக்க முடியவில்லை.
ஒரு சம்பவம்: அரண்மனையையட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.வாயிற்காவலனிடம், ராஜாவைப் பார்க்க வேண்டும் என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே? என்றார் அரசர். ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந்துக்கு வருவேன் என்றான் மிகவும் பவ்வியமாக.அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்! அப்போது மன்னர் அவனிடம், விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று... இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது என்றார். கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,
மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்துவிட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?! என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான். வீடு வாசல் இல்லாத அவனால், பழைய துணி களை எங்கேயும் வைக்கமுடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.
அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது. அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் கந்தல் பொதி கிழவன் என்றே அழைத்தனர்.
இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான். ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.
அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியரு மூட்டை இருக்கிறது.
அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்துவிடுகிறது.
அரண்மனைகளில்கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர் களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு. மனதில் இருக்கிறது மகிழ்ச்சி. வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது. நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை.
நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன. அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை. வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர். இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.
மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.
மகிழ்ச்சியாக இருப்போம்;
அப்போது காரணங்கள், தாமாகத் தோன்றி தோரணங்களாகித் துணை நிற்கும்.

இந்த நிலை மாறுவது எப்போது?

1) அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.
2) பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.
3) வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.
4) பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!
5) ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!
6) நாம் அணியும் உள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.
7) நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.
8) மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9) கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!
10) பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!
11) குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!
இந்த நிலை மாறுவது எப்போது?
தூங்கும் பாரதமாதாவைதான் எழுப்பிக் கேட்க வேண்டும்!